பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்

கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.

Update: 2020-07-04 05:32 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா  அறிகுறிகளுடன் 55-வயது நபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வரும் வரை அவர் வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்தது.  இதற்கு மத்தியில், அந்த நபருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தார்.

ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், ரிக்‌ஷா மூலமாக மருத்துவமனை அழைத்துச்செல்ல முடிவு செய்தனர். மருத்துவமனைக்குச்செல்ல  வீட்டை விட்டு வெளியே வந்தததும் அந்த நபர் உயிரிழந்தார். இதையடுத்து  வீட்டின் முன் இருந்த சாலையில் உடலை வைத்து ஆம்புலன்ஸுக்காக குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் சுமார் 3 மணி நேரம் தாமதாக வந்துள்ளது. அதுவரை உடலின் அருகே குடும்பத்தினர் இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  கொரோனா தொற்று நெருக்கடியை கையாள நியமிக்கப்பட்டு இருக்கும் மந்திரி  ஆர்.அஷோக் கூறும்போது, இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  தொடர்ந்து, பெங்களூர் குடிமை அமைப்பு ஆணையர் அனில் குமார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், சுகாதார சேவைகளில் பெரும் அழுத்தம் இருந்தாலும், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என்று அவர் கூறினார். 

மேலும் செய்திகள்