கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 522 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,252 பேர் ஆகவும் இருந்தது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கேரளாவில் இன்று ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 894 ஆக உயர்ந்து உள்ளது. 111 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை 2,411 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் 169 பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக உள்ளன என அவர் கூறியுள்ளார்.