மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 10,482 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,482 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

Update: 2020-07-13 15:29 GMT
புனே,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.  மராட்டியத்தின் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிற 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  கொரோனா பாதிப்புகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகளுக்கு 193 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 482 ஆக உயர்ந்து உள்ளது.  6,497 புதிய பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்து 924 ஆக உயர்ந்து உள்ளது.

4,182 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.  இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து, 1 லட்சத்து 5 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்