டெல்லியில் கொரோனா பாதித்த டீன் ஏஜ் சிறுமியை கற்பழித்த மற்றொரு நோயாளி

டெல்லியில் கொரோனா பாதித்த டீன் ஏஜ் சிறுமியை மற்றொரு நோயாளி கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2020-07-23 17:29 GMT
புதுடெல்லி,

டெல்லியில் சத்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை நல மையம் ஒன்று ஆளுனர் அனில் பைஜால் முன்னிலையில் இந்த மாத தொடக்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தில் கொரோனா பாதித்த 14 வயது டீன் ஏஜ் சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குளியலறைக்கு சென்ற சிறுமியை கொரோனா பாதித்த மற்றொரு நோயாளி கற்பழித்து உள்ளார்.  சிறுமி மற்றும் குற்றவாளி இருவரும் குடிசை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.  அவர்கள் இரண்டு பேரும் தங்களது உறவினர்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  சம்பவம் பற்றி சிறுமி தனது உறவினரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, 19 வயதுடைய குற்றவாளியையும், அவனது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற பெண் நோயாளியை டாக்டர் ஒருவர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.  அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கொரோனா பாதித்த டீன் ஏஜ் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட மற்றொரு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்