10-வகுப்பு தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற தாய், மகன்

மராட்டியத்தில் 10 வகுப்பு தேர்வில் ஒரே நேரத்தில் தாயும், மகனும் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2020-08-02 03:04 GMT
புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பாரமதியைச் சேர்ந்தவர் பிரதீப் குராவ் (வயது 39). இவரது மனைவி பேபி குராவ் (வயது36). இவர்களது மகன் சதானந்த் (வயது16) கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வை எழுதினார். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த அவரது தாய் பேபியும் இந்த முறை 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதியிருந்தார்.

இந்தநிலையில்  தேர்வு முடிவுகள் கடந்த 29-ம்தேதி வெளியாயின. இதில் பேபி குராவ் 64.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அவரது மகன் சதானந்த் 73.20 சதவீத மதிப்பெண்கள் எடுத்தார். தாயும், மகனும் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவரை விட பேபி குராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேபி குராவ் கூறியதாவது:-

எனக்கு படிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் சிறு வயதிலேயே எனக்குத் எனது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விட்டனர். என் விருப்பத்தைக் கணவரிடம் தெரிவித்தேன். அவரும் என்னை ஊக்குவித்து தேர்வு எழுத விண்ணப்பிக்க கூறினார். அவருடைய ஊக்கத்தால் இரவு நேரங்களிலும் விடாமுயற்சியாக 10- வகுப்பு தேர்வில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தொடர்ந்து உயர்க்கல்வி படிப்பு படிக்க விரும்புகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்