சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு; காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

Update: 2020-08-04 01:18 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாவும்  மத்திய அரசு பிரித்தது.  இந்த நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  தற்போது  நிலைமை  சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்பட பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் மெகபூபா முப்தி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன்( புதன்கிழமை) ஒரு  ஆண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில், காஷ்மீரில்  இன்றும் நாளையும் என இருநாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவில், ”ஆகஸ்ட் 5 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாகவும், பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடலாம் எனவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இன்றும் (ஆகஸ்ட் 4) நாளையும் (ஆகஸ்ட் 5) 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடவும், போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  நாளையுடன் ஒரு ஆண்டு  நிறைவடைவதால் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்