கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2020-08-06 03:22 GMT
அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர  தீ விபத்தில் சிக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பலியாகினர்.

மேலும், 40 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பத்திரமாக மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வெளியே கூடியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களின் உறவினர்களுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்று பதைபதைப்புடன்  குடும்பத்தினர் வெளியே நிற்கும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்