ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-08-06 05:27 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவு அடைந்தது.

இதனால், அங்கு  அசம்பாவித சம்பவங்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  குல்காம் மாவட்ட பாஜக துணை செயலாளர் சஜாத் அகமது மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, சஜாத் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த சஜாத் அகமது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சஜாத் அகமது  உயிரிழந்தார். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சஜாத் அகமது உள்ளூர் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து வந்தார்.

கடந்த சில வாரங்களில் பாஜக தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் 4-வது தாக்குதல் இதுவாகும்.  

மேலும் செய்திகள்