4 வருட விரிவான விவாதம், லட்சக்கணக்கானோரின் ஆலோசனைகளுக்கு பின் தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல்; பிரதமர் மோடி பேச்சு
4 வருட விரிவான விவாதங்கள், லட்சக்கணக்கானோரின் ஆலோசனைகளுக்கு பின் தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
புதிய கல்வி கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்த நிலையில், தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாற்ற சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த உரையில் பிரதமர் மோடி பேசும்பொழுது, கடந்த 3 முதல் 4 வருடங்கள் வரை நடந்த விரிவான விவாதங்கள் மற்றும் லட்சக்கணக்கானோரின் ஆலோசனைகள் ஆகியவற்றுக்கு பின்னரே தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று தேசிய கல்வி கொள்கை பற்றி விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளை சேர்ந்த மக்கள் தங்களது பார்வைகளை முன்வைக்கின்றனர். கொள்கையை மறுஆய்வு செய்கின்றனர். இது ஓர் ஆரோக்கிய விவாதம். எந்த அளவிற்கு அலசி ஆராயப்படுமோ அந்த அளவுக்கு நாட்டின் கல்வி திட்டத்திற்கு பலன் இருக்கும் என கூறினார்.