3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்து இருந்த சென்னை பல்கலை.மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

மசோதாவை கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த நிலையில், அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.;

Update:2025-12-29 16:36 IST

புதுடெல்லி,

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நிதித்துறைச் செயலரை நியமிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்திருந்தது.

உயர் கல்வித்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த நிலையில், அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். மத்திய–மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரம் என்பதால், இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்திருந்தார். 

இந்த மசோதா மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார். மசோதா, திருப்பி அனுப்பப்பட்ட விவரம் தமிழக சட்டத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களின் நிலை என்ன என்பது தற்போது தெரியவில்லை. அதாவது, பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மசோதாக்களின் நிலை ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்