டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை: பிரணாப் முகர்ஜி ‘கோமா’ நிலையை அடைந்தார்

டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜி ‘கோமா’ நிலையை அடைந்தார்.

Update: 2020-08-13 23:00 GMT
புதுடெல்லி, 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு, இடது கை உணர்ச்சியற்றதாகவும் இருந்ததால் ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்ததால், டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்த ரத்த கட்டியை அகற்றினர். ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

பிரணாப் முகர்ஜி நேற்று காலை நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக உள்ளன. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து நேற்று வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தனது தந்தை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல் பொய் என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும், இதயத்தின் செயல்பாடு நிலையாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதேபோல் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகள் தவறானவை என்று டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்