நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் இன்றும் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நேற்று நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மும்பை,
34 வயதான பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரிக்கும் உரிமை யாருக்கு என்பதில் மராட்டியம், பீகார் மாநிலங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு கடந்த 8 நாட்களாக விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் சிங், வீட்டு வேலைக்காரர் தீபக் சாவந்த் உள்ளிட்டவர்களிடம் பலகட்ட விசாரணையை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் நடிகை ரியாவின் சகோதரர் சோவிக்கிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று நேற்று காலை 10.30 மணிக்கு டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நடிகை ரியா ஆஜரானார்.
அவரிடம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். 20 கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, அந்த கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. ரியா சக்ரபோர்த்தியிடம் சுமார் 10 அரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடிகை ரியா வெளியே வந்தார்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்று ரியா சக்ரபோர்தியிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்கு இன்றும் ஆஜராகுமாறு ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் விடுத்துள்ளது.