நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2017ல் 'டியாஜியோ' நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்கள் தன்யா லீனா ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.
பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால் விஜய் மல்லையா மீது எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2017-ல் விஜய் மல்லையா சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.