மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி,
கடந்த 22 நாட்களாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை காலமானார். பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் . பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜத் முகர்ஜிக்கு பிரதமர் ஆறுதல் கூறினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.