இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது - ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் கருத்து

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-15 14:33 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியிருப்பதாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்(எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) இயக்குனர் பல்ராம் பார்கவா, “இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது” என்று கூறினார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-

“ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, ​​உயிரிழப்புகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகின. நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள போதிலும், இறப்பு எண்ணிக்கை குறைவான அளவில் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் இதுதான். எனவே இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்