நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-23 12:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 20-ந் தேதி விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்கள் விலை உத்தரவாத மசோதா ஆகிய2 மசோதாக்களும் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, அவற்றை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்தனர்.

ஆனால் அதை சபையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஏற்க மறுத்தபோது, அவரது இருக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் சபை விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்தார். இதனால், அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக  நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.  இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு  ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை  விடுத்து  ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்