கேரளாவில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்

கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-10-03 02:36 GMT
திருவனந்தபுரம்,

நாட்டில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவான கேரளா, துவக்கத்தில் தொற்று பரவலை கணிசமாக கட்டுப்படுத்தியது. இதனால், பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்ற அந்த மாநிலத்தில் சமீப வாரங்களாக தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கேரளாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக  கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இன்று காலை முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. எனினும், பொது போக்குவரத்து, வங்கி சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் திருமணம், இறுதிச்சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. பிற மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.  அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படும்.  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு  அக்.3 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்