நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-19 09:40 GMT
சென்னை, 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாகக் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா பாதிப்புகளுக்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்கலைக்கழக் மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையைக் கடந்த மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கைப் பணிகள் அனைத்தும் நவம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 1-ம் தேதிக்கு உள்ளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்