ரமேஷ் பொக்ரியால் மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-10-26 20:07 GMT
புதுடெல்லி, 

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள், பதவியில் இருந்து விலகிய பின்னரும் அரசு பங்களாக்களில் வசித்தது சட்ட விரோதம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அங்குள்ள ஐகோர்ட்டு கடந்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

மேலும், அனைத்து முன்னாள் முதல்-மந்திரிகளும், பதவி விலகிய நிலையில் அரசு பங்களாக்களில் வசித்ததற்கு அந்த காலகட்டத்துக்கான வாடகையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செலுத்த உத்தரவிட்டது. மேலும் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை தீர்ப்பு கிடைத்த 4 மாதத்திற்குள் மாநில அரசு கணக்கிட்டு கூற வேண்டும், அதை 6 மாதத்திற்குள் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஐகோர்ட்டில் தொடுத்தது. இதற்கு எதிராக ரமேஷ் பொக்ரியால், சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இதையடுத்து அவர் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்