கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே உடல்நல குறைவால் காலமானார்.
புனே,
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பரத் பால்கே. பந்தர்பூர்-மங்கள்வேதா தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
அதற்காக சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்து வீடு திரும்பினார். எனினும், அதற்கு பின் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவரை புனேவில் உள்ள ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அவருக்கு நேற்று வென்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.