ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை துவக்கி வைத்த ராஜ்நாத் சிங்
ராணுவ கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேன்டீன் ஸ்டோர்ஸ் துறையின் கேண்டீன்களில் பொருள்களை வாங்குவதற்கான இணையதளத்தை (https://afd.csdindia.gov.in/) மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 45 லட்சம் பயனாளிகள் கார்கள், இருசக்கர வாகனங்கள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்களைத் தங்கள் வீடுகளிலிருந்து சுலபமாகப் பெறும் நோக்கத்தில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியைப் பாராட்டிய மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த இணையதள திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழுவினரை அவர் பாராட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.