முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்குக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-01-10 14:54 GMT
புதுடெல்லி,

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் மே 17, 18 தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண், இலங்கை அரசால் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டது. 

இலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்துணை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜா, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள மக்களோடு சமத்துவத்தோடு சகஜமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்