டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் இருந்து டெல்லி புறப்பட்ட விவசாயிகள்

குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Update: 2021-01-17 10:37 GMT
லூதியானா,

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் ஏறத்தாழ இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு - விவசாயிகள் இடையே இதுவரை 9 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால்,இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

விவசாய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. ஆனால் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர். 

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஏற்கனவே திட்டமிட்டபடி, டெல்லியில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை மிக பிரம்மாண்டமாக நடத்த விவசாய சங்கங்களில் ஒரு பிரிவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி புறப்பட்டனர். குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர். 

மேலும் செய்திகள்