அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தொடர்ந்து இருப்பார் - டிடிவி தினகரன்
ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணி தொடரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு,
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக சசிகலா மருத்துவமனையில் இருந்து சொகுசு விடுதிக்கு சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
இது குறித்து சசிகலாவின் உறவினரும் அமமுக பொதுச்செயலாளருமான தினகரன் பேட்டி அளிக்கையில் கூறியதாவது: 'அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருக்கிறது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணி தொடரும்.
சசிகலா தமிழகம் வந்தபின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டம் தொடரும்.ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டது. மருத்துவர்கள் அறிவுரைப்படி ஒருவாரம் பெங்களூருவில் ஓய்வு எடுத்துவிட்டு சசிகலா சென்னை திரும்புவார்” என்றார்.