மண்டியா அருகே வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொலை: மர்ம நபரை போலீஸ் தேடுகிறது

மண்டியா அருகே, வீடு புகுந்து பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-02-02 18:56 GMT
கோப்புப்படம்
மண்டியா, 

மண்டியா மாவட்டம் மத்தூர் டவுன் வி.வி.நகரில் வசித்து வந்தவர் 39 வயது பெண். இவர் அப்பகுதியில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவரது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். பிள்ளைகளும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். 

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் அவரது வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த ஒரு மர்ம நபர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டார். பின்னர் வீட்டில் இருந்த டி.வி.யை போட்டு அதிக அளவில் சத்தத்தையும் வைத்தார். 

பின்னர் அந்த நபர், அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்தார். பின்னர் அவர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் நீண்ட நேரமாக அந்த பெண்ணின் வீட்டில் இருந்து அதிக அளவில் சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது அந்த பெண் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

அதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி மத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம், மத்தூர் டவுன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 

பின்னர் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கற்பழித்து கொன்ற நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்