சீன கடல் பகுதியில் கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு தகவல்

சீன கடல் பகுதியில் பல மாதங்களாக கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-02-10 19:30 GMT
புதுடெல்லி, 

இந்தியாவை சேர்ந்த எம்.வி.ஜாக் ஆனந்த் கப்பல் மற்றும் எம்.வி. அனஸ்தாசியா ஆகிய 2 சரக்கு கப்பல்கள் சீன கடற்பகுதியில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் இந்திய மாலுமிகள் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். கொரோனாவை காரணம் காட்டி, அந்த கப்பல்களை துறைமுகங்களுக்குள் அனுமதிக்கவோ, அதில் இருந்த ஊழியர்களை மாற்றவோ சீனா அனுமதிக்கவில்லை.

எனவே ஜாக் ஆனந்த் கப்பலை ஜப்பானுக்கு கொண்டு சென்று, அதில் இருந்த 23 இந்திய மாலுமிகள் இறக்கப்பட்டு, புதிய ஊழியர்கள் மாற்றப்பட்டனர். அதில் இருந்த 23 பேரும் கடந்த மாதம் இந்தியா வந்தனர்.

இதைத்தொடர்ந்து அனஸ்தாசியா கப்பலும் ஜப்பான் கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலுமிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதில் இருந்த இந்திய மாலுமிகள் 18 பேரும் நேற்று ஜப்பானில் இருந்து திரும்பினர். அவர்கள் வருகிற 14-ந்தேதி இந்தியா வந்து சேர்வார்கள் என மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்