கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு : மும்பை மாநகராட்சி எச்சரிக்கை

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-02-20 15:10 GMT
Photo credit: PTI
மும்பை,

மும்பையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த தொடக்கத்தில் தினமும் 300 முதல் 400 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே நகரில் மின்சார ரெயில்களில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் தொற்று பாதிப்பு அதிகரித்து தொடங்கி உள்ளது.

குறிப்பாக கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. இது மும்பை மாநகராட்சி, மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மேயர் கிஷோரி பெட்கேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி கொரோனா தடுப்பு விதிகளை மீண்டும் கடுமையாக அமல்படுத்த தொடங்கி உள்ளது. விதிகளை மீறும் பொது மக்களிடம் அதிரடியாக அபராதம் வசூலித்து வருகிறது.

குறிப்பாக முக கவசம் இன்றி பொதுஇடங்களில் செல்லும் பொதுமக்களை பிடிக்க கிளின்அப் மார்ஷல்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஆயிரத்து 400 கிளின் அப் மார்ஷல்கள் பணியில் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ரெயில் நிலையங்கள், ரெயில்களில் முககவசம் அணியாதவர்களை பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களில் மட்டும் முககவசம் அணியாத பயணிகளை பிடிக்க 300 கிளின்அப் மார்ஷல்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இன்று 897- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று மக்களுக்கு மும்பை மாநகராட்சி மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்