மும்பை ஓட்டலில் தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. மர்ம மரணம்
தாத்ரா - நாகர் ஹவேலி எம்.பி. மோகன் எஸ். டெல்கர் உடல் மும்பையில் விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை
தெற்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 58 வயதான மோகன் டெல்கர்ருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து மும்பை போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.சி.பி சைதன்யா சிரிப்ரோலு கூறும் போது டெல்கரின் உடல் மரைன் டிரைவ் காவல் நிலையத்தின் வரம்பில் உள்ள ஓட்டலில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடைதம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது . விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து தெரியவரும் என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தாத்ரா நகர் ஹவேலி எம்.பியாக டெல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் ஏழாவது முறை எம்.பியாக தேர்ந்து எடுக்கபட்டு உள்ளார். பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான அவர் 2019 முதல் தாத்ரா-நாகர் ஹவேலி எம்.பி.யாக உள்ளார். முன்னதாக இவர் காங்கிரசில் இருந்தார். நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்த அவர் மக்களவையில் உள்ள வீட்டு விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.