குஜராத் உள்ளாட்சித் தேர்தல்; பெரும்பாலான வார்டுகளில் பாஜக முன்னிலை

குஜராத் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2021-02-23 09:07 GMT
அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கடந்த 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 

6 மாநகராட்சிகளிலும் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 

இந்த நிலையில் காலை முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் அக்கட்சி உள்ளது.

மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்