வெகுநாள் கனவு நனவானது மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராகுல்காந்தி

மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராகுல்காந்தி வெகுநாள் கனவு நனவானது என கூறி உள்ளார்.

Update: 2021-02-24 17:16 GMT
கொல்லம்

கேரள மாநிலத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீனவர்களுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது வெகுநாள் கனவு நனவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லத்தில் கடற்பகுதிக்கு இன்று அதிகாலை வந்த ராகுல் காந்தி, மீனவர்களுடன் சேர்ந்து படகில் பயணித்தார். திரும்பி வந்த போது நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

 பல நாள்களாக இருந்த எனது கனவு நிறைவேறி உள்ளது.படகில் ஏறியது முதலே, திரும்ப கரைக்கு வரும்வரை மிக ஆழமான கடலில் பயணித்தேன். இதன் மூலம் மீனவர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டேன். 

 வாழ்நாள் முழுக்க கடலுடன் போராடிக் கொண்டே இருக்கும் மீனவர்கள் யாரோ சிலரின் லாபத்துக்காக இப்பணியைச் செய்கிறார்கள் என்றார்.நானே படகிலிருந்து வலையைப் போட்டு, பிறகு மெல்ல அதை மேலே எடுத்தேன். அந்த வலையில் ஒரே ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் நான் நினைத்தேன், வலை முழுக்க நிறைய மீன்கள் வரும் என்று, ஆனால் அப்படி நடக்கவில்லை என்றார் கவலையோடு.

இந்த ஒரு மணி நேர பயணத்தின் மூலம் உங்கள் அனைவரின் மீதும் இன்னும் மதிப்பு அதிகரிக்கிறது, உங்கள் வாழ்க்கை எந்த அளவுக்கு ஆபத்து நிறைந்தது என்று தெரியும், நாம் அனைவருமே மீன் சாப்பிடுகிறோம், ஆனால், அனைவருமே அவர்களது கடினமான வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதில்லை. 

மீனவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, மத்திய அமைச்சரகம் உருவாக்கப் பாடுபடுவேன். இதுவரை மீன்வளத்துறை அமைச்சகம் இல்லை. அதனால் மத்தியில் மீன்வளத்துக்கு என அமைச்சகம் உருவாக்கக் குரல் கொடுப்பேன் என்று ராகுல் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்