வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும்; பிரதமர் மோடி உறுதி

4 முக்கிய துறைகளை தவிர, மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-02-25 04:31 GMT
வணிகம்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று இணையவழியில் பேசினார்.

அவர் பேசியதாவது:-

தொழில் முயற்சிகளுக்கும், வணிகங்களுக்கும் ஆதரவு அளிப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், அந்த தொழில்களை அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல. அதனால்தான், பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டும் அல்லது நவீனப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.

தனியார்மயம்
ஏனென்றால், நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. அப்படி நலிந்த நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் அளிப்பதால், பொருளாதாரத்தின் மீது சுமை கூடுகிறது. பாரம்பரிய பெருமைக்காக மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களை நடத்தக்கூடாது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகளை சேர்ந்த குறைந்தபட்ச பொதுத்துறை நிறுவனங்களை தவிர, மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நாட்டில் குறைவாக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தப்படாத சொத்துகள் உள்ளன. அத்தகைய 100 சொத்துகளை விற்று ரூ.2½ லட்சம் கோடி திரட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்