டெல்லி முதல் மந்திரியை கொல்ல போகிறேன் என தொலைபேசியில் போலீசாரிடம் கூறிய நபர்
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலை கொல்ல போகிறேன் என தொலைபேசியில் போலீசாரிடம் கூறிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
டெல்லி முதல் மந்திரியை கொலை செய்வதற்காக எனனிடம் ஆயுதங்களும் மற்றும் வெடிபொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
இதனால் உஷாரான டெல்லி போலீசார் இதுபற்றிய விசாரணையில் இறங்கினர். அதில், சந்தேகப்படும்படியான 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதன் முடிவில் போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருமணம் ஆகாத, வெள்ளை அடிக்கும் தொழில் செய்து வரும் அந்நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டோம். அந்த நபர் ஒரு குடிகாரர். போதைக்கு அடிமையானவர் என்று தெரிவித்து உள்ளனர்.