நாட்டில் 5 மாநிலங்களில் 84.49 சதவீத கொரோனா பாதிப்புகள் உறுதி
நாட்டில் 5 மாநிலங்களில் 84.49 சதவீத கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 46,951 ஆக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 84.49 சதவீத கொரோனா பாதிப்புகள் மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகி உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இவற்றில் மராட்டியம் அதிக அளவாக (30,535 பேர்) பாதிப்புகளை கொண்டுள்ளது. இதற்கு அடுத்து பஞ்சாப் (2,644 பேர்) மற்றும் கேரளா (1,875 பேர்) உள்ளன.
தினசரி பாதிப்பு விகிதம் (7 நாட்களின் சராசரி) 3.70 சதவீதமாக உள்ள நிலையில், தேசிய சராசரியை விட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வார பாதிப்பு விகிதம் அதிக அளவில் உள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 51 ஆயிரத்து 468 ஆக உள்ளது. தேசிய சராசரி விகிதம் 95.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 212 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இவற்றில் 6 மாநிலங்களில் 85.85 சதவீத உயிரிழப்புகள் உள்ளன. மராட்டியம் (99) அதிக உயிரிழப்புகளை கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து பஞ்சாப் (44) மற்றும் கேரளா (13) ஆகியவை உள்ளன.