பஞ்சாப்பில் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டம்
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு உயர்வால் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆளும் காங்கிரஸ் அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
இதனால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. எனினும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. இது தவிர விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள், பெற்றோரின் முன் அனுமதியுடன் பள்ளிகளுக்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
எனினும், பஞ்சாப்பில் அமிர்தசரஸ் நகரில் உள்ள குரு நானக் தேவ் பல்கலை கழகம் மற்றும் கால்சா கல்லூரி கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு மூடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸ் நகரில் திரண்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரிகளை மீண்டும் திறக்கும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுபற்றிய வாசகங்கள் அடங்கிய பேனர்களை உயர்த்தி பிடித்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.