காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

காஷ்மீரில் நகராட்சி அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கவுன்சிலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-03-29 10:22 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த நகராட்சி அலுவலகத்திற்குள் இன்று நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில், நகராட்சி அலுவலகத்தில் இருந்த  ரியாஸ் அகமது என்ற கவுன்சிலரும், ஷஃப்ஹட் அகமது என்ற போலீஸ்காரர் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், ஷாம்ஸ்உத்தின்பீர் என்ற மற்றொரு கவுன்சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் நகராட்சி அலுவலக கட்டிடத்தை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 

இதையடுத்து, அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்