தோல்விகளை மறைக்க தடுப்பூசி பீதியைப் பரப்புவதா? மராட்டிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம்

தோல்விகளை மறைக்க தடுப்பூசி பீதியைப் பரப்புவதா? என மராட்டிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-08 05:58 GMT
மத்திய அரசு கண்டனம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக மோசமாக உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது, மராட்டிய மாநிலம். ஆனால் இங்கு தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பீதியை பரப்புவதாக கூறி மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் விடுத்துள்ள அறிக்கையில், “மராட்டியமும், இன்னும் சில மாநிலங்களும் தங்களது தோல்வியை மறைக்க முயற்சிக்கின்றன. தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடுப்பூசியை போடாமல், அனைவருக்கும் தடுப்பூசி போடக்கூறி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புகின்றன” என சாடி உள்ளார்.

அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தடுப்பூசி பீதி
தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என்று சில மாநிலங்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.சத்தீஷ்காரில், மக்களிடம் தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி, தடுப்பூசி பற்றிய பீதியை ஏற்படுத்துகிறார்கள். இந்த மாநிலத்தில் துரிதபரிசோதனையை நம்பி இருப்பது புத்திசாலித்தனமான உத்தி இல்லை.கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரிசோதனை தரம் மேம்படுத்தப்பட வேண்டும். பஞ்சாப்பில் பலி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வினியோகிக்க மாநிலங்கள் கோருகிறபோது, அவர்கள் சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்து விட்டார்கள் என்று கருத வேண்டியதாகி விடுகிறது. ஆனால் உண்மை அவ்வாறில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்