சின்னத்திரை நடிகை சைத்ரா விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடியும், பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-04-08 21:29 GMT
சைத்ரா
கோலார்:

காதல் திருமணம்

  கோலார் (மாவட்டம்) டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா கொட்டூர். இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஆவார். மேலும் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்ஜூன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். நாகர்ஜூன் தொழில் அதிபர் ஆவார்.

  இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் நாகர்ஜூனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் நாகர்ஜூன், சைத்ராவுடனான காதலை கைவிட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து சைத்ரா, கன்னட சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்பினரின் உதவியுடன் கோர்ட்டு மூலம் நாகர்ஜூனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி கோலாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து நடந்தது.

போலீசில் புகார்

  ஆனால் திருமணம் முடிந்த அன்று இரவே, நாகர்ஜூன் கோலாரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் தனக்கு நடந்த இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்பினரின் வற்புறுத்தலால் தான் சைத்ராவின் கழுத்தில் தாலி கட்டியதாகவும் கூறி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சைத்ராவை பிடித்து விசாரித்தனர்.

  அப்போது அவர் தான் நாகர்ஜூனை காதலிப்பதாகவும், அவருடன் தான் செல்வேன் என்றும் உறுதியாக கூறினார். ஆனால் நாகர்ஜூனும், அவரது குடும்பத்தினரும் சைத்ராவை ஏற்க மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் சைத்ரா தனது பெற்றோருடன் கோலாரில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.

தற்கொலை முயற்சி

  தனது திருமண வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் மனமுடைந்த வாழ்ந்து வந்த சைத்ராவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அவரும், அவரது காதல் கணவரான நாகர்ஜூனும் நெருக்கமான எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

  இதனால் மனமுடைந்த சைத்ரா நேற்று தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் பரபரப்பு

  இதையடுத்து இச்சம்பவம் குறித்து நாகர்ஜூனின் குடும்பத்தினருக்கு சைத்ராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்பேரில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்