புதிதாக வாங்கிய செருப்பை கடித்ததால் வளர்ப்பு நாயை ஸ்கூட்டரில் கட்டி 4 கி.மீ. தூரம் இழுத்து சென்ற கொடூரம்; உரிமையாளர் கைது

புதிதாக வாங்கிய செருப்பை கடித்த நாயை 4 கி.மீ. தூரம் ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூர உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-18 17:42 GMT
வளர்ப்பு நாய்
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாயை அதன் உரிமையாளர் காரின் பின்புறம் கட்டி இழுத்துச்சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோன்று தற்போது மீண்டும் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு செருப்பு வாங்கினார். அந்த செருப்பை வாசலில் கழற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

செருப்பை கடித்தது
அப்போது அங்கு படுத்திருந்த நாய், அந்த புதிய செருப்பை கடித்து குதறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சேவியர் அந்த நாயை அடித்து உதைத்தார். அப்படியும் அவருடைய ஆத்திரம் தாங்க முடியவில்லை.அதன் கழுற்றில் ஒரு கயிறை கட்டி அந்த கயிறை தனது ஸ்கூட்டரின் பின்புறம் கட்டினார். பின்னர் அந்த ஸ்கூட்டரில் தனது நண்பருடன் நாயை இழுத்துச் சென்றார். சிறிது தூரம் ஓடிய அந்த நாய், ஸ்கூட்டர் வேகமாக சென்றதால் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் கிறங்கியது..

4 கி.மீ. தூரம் இழுத்து சென்றார்
இதனால் சற்று நேரத்தில் நாய் கீழே விழுந்தது. இருந்தபோதிலும் இரக்கம் இல்லாமல் அந்த நாயை ரோட்டில் தரதரவென இழுத்து சென்றார். இதன் காரணமாக நாயின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. வலியால் அந்த நாய் அலறியது.இருந்தபோதிலும் அதை கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றார். அப்போது சிலர் அவரை வழிமறித்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் எனது நாய், நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்று கூறி 4 கி.மீ. தூரும் ஈவு இரக்கம் இல்லாமல் இழுத்துச் சென்றார்.

கைது செய்தனர்
இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டனர். இதைப்பார்த்த மிருக வதைதடுப்பு அதிகாரி சாலிவர்மா மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் இது குறித்து எடக்கரை போலீசில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியரை கைது செய்தனர். காயம் அடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்