கொரோனா பாதித்த நபருடைய தாயாரின் இறுதி சடங்கிற்கு உதவி; டெல்லி போலீசாரின் மனிதநேயம்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய கொரோனா பாதித்த நபருடைய தாயாரின் இறுதி சடங்கிற்கு டெல்லி போலீசார் உதவி செய்துள்ளனர்.

Update: 2021-04-29 07:24 GMT
புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 300க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளுக்கு பலியாகி வருகின்றனர்.  கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் நேற்று 368 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவும் வகையில் டெல்லி போலீசார் செயல்பட்டு உள்ளனர்.  அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ராகேஷ் கோச்சார் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவரது தாயார் நிர்மலா கோச்சார் (வயது 90) கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்து உள்ளார்.  இதனையடுத்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

கொரோனா பாதித்த ராகேஷால் தனது தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை.  இதனை தொடர்ந்து டெல்லி மாளவியா நகர் காவல் நிலைய போலீசார் அவரது உதவிக்கு வந்துள்ளனர்.  காவல் துறையினர் தங்களது கடமையுடன் கூடுதலாக இதுபோன்ற சேவையிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்புகளை பெறுகின்றனர்.

மேலும் செய்திகள்