அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு விமானம் மூலம் 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.

Update: 2021-05-01 20:30 GMT
டெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 லட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான நிலவரத்தில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட உதவி செய்து வருகின்றன. 

அந்த வகையில், இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவும் அனுப்பி வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களில் 2 விமானங்கள் மூலம் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று மேலும் மருத்துவ உபகரணங்கள் இன்று இந்தியாவுக்கு வந்துள்ளன. கடந்த இரண்டு நாள்களில் அமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்தியாவுக்கு வரும் 3-வது விமானம் இதுவாகும். இந்த விமானத்தில் 1,0000 ஆக்சிஜன் செறியூட்டிகள், ரெகுலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு மருத்துவ உதவி அனுப்பியுள்ள அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்