கொரோனா காலத்தில் தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டும் இணையதளம்

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் உதவி தேவைப்படுவோருக்காக ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது, ‘ஏஞ்சல் நெக்ஸ்ட் டோர்’ இணையதளம். உதவி பெற விழைவோருக்கும், உதவ நினைப்போருக்கும் இடையே பாலமாக அமைந்த இந்த இணையதளம், ஆஸ்திரேலியாவில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Update: 2021-05-04 19:49 GMT
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவில் அந்த இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.உடனடியாக மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் அல்லது ரெம்டெசிவர் மருந்து போன்றவை தேவைப்படுவோர் இந்த இணையதளத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை வழங்குவோர், இருப்பு போன்றவற்றைப் பற்றிய உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை இந்த இணையதளம் வழங்கும். லாப நோக்கம் அல்லாத, சமூகம் சார்ந்த இந்த இணையதளம், உயிர்களைக் காக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது என்று இதன் நிறுவனரான, இந்திய-ஆஸ்திரேலிய தொழில்முனைவாளர் ஆமிர் குதுப் தெரிவித்துள்ளார்.

இ்ந்த இணையதளத்தின் தனித்த அம்சம், ஒருவரால் நேரடி நேரத்தில் தகவல்களை பதிவேற்ற முடியும். தேவைப்படுவோருக்கு அதே நேரத்தில் மற்றவர்களால் உதவ இயலும். இந்த இணையதளம் தொடங்கப்பட்ட ஒரு நாளுக்குள்ளேயே 800-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வழங்குவோர் குறித்து சரிபார்க்கும் தானியங்கி அமைப்பு, ஒரு நாளைக்கு இருமுறை தானாக சரிபார்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘ஏஞ்சல் நெக்ஸ்ட் டோர்’ இணையதளம் மூலம் உதவி கோருவோர், வழங்குவோரின் நலன் கருதி, அனைத்து தகவல்களும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளில் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்