2-ம் வாய்ப்பாடு தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என திருமணத்தை நிறுத்திய மணமகள்!

உத்தரபிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு தெரியததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-06 14:10 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளில் மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு வந்தடைந்தார்.

 அப்போது மணப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளையின் கல்வித் தகுதியை சோதித்து பார்க்க முயன்றுள்ளார். அதனால் மாப்பிள்ளையிடம் 2ம் வாய்ப்பாட்டை கூறுமாறு கேட்டார். ஆனால் மணப்பெண்ணின் கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் மாப்பிள்ளை வாய்ப்பாடு கூற திணறியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண், சாதாரண கணக்கு கூட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மணப்பெண்ணின் பெற்றோர் அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் படிப்பறிவு இல்லாத ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இவருடைய இந்த முடிவு சரியானதுதான் என்று மணப்பெண்னின் உறவினர்களும் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் மத்தியில் இருவீட்டாரும் வழங்கிய சீதனப் பொருட்களை சரிபார்த்து பிரித்து திருமணம் நின்று போனதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்