மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது: ராகுல் காந்தி பாய்ச்சல்
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். அவ்வப்போது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை சாடி பதிவிட்டு வரும் ராகுல் காந்தி இன்று தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய அரசு தொடந்து தனது செயல்களுக்கு பெருமையடித்து வருகிறது. மத்திய அரசு தனது கடமைகளை, பணிகளை முறையாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்தநிலை வந்திருக்குமா” என விமர்சித்துள்ளார்.
இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்ற உதவிகள் குறித்து வெளிப்படத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும் என கடந்த வாரம் மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மருத்துவ நிவாரண உதவிகளை அளித்துள்ளன.