“சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன” மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்

Update: 2021-05-11 10:21 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது  அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டு பீகார் வந்தடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில், ராகுல் காந்தி இவ்விவகாரம் குறித்து மத்திய அரசை சாடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:  கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் நதிகளில் அடித்து செல்லப்படுகின்றன. கொரோனா சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். 

மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது பிங்க் நிற கண்ணாடியைக் கழற்றி வைத்துப் பார்த்தால் தான் சென்ட்ரல் விஸ்டாவைத் தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும்” எனத்தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்