இந்தியாவில் கொரோனா 2-வது அலை எப்போது குறையும்- நிபுணர் தகவல்

தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கொரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

Update: 2021-05-12 12:32 GMT
புதுடெல்லி

கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்ட இந்தியா, 2-வது அலையில் இருந்து மீள்வதற்காக தனது ஆவேசப்போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 3 வது நாளாக இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,55,338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,93,82,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,04,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா 2-வது அலை பாதிப்பு குறித்தும் தொற்று பரவல் எப்போது குறையும் என்பது குறித்தும் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர், வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல்  கூறியதாவது:

கொரோனா 2-வது அலை  பரவுவதற்கு உருமாறிய கொரோனா வைரசும் காரணம். உருமாறிய கொரோனா வைரசால்தான் இன்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூற முடியாது.

கொரோனா 2-வது அலை  வேகமாக உச்சத்தை அடைந்துவிட்டது. கொரோனா பாதிப்பு குறைவதாக தற்போதைய வரைபடம் காட்டுகிறது. ஆனால், முழுவதுமாகக் குறைவது அவ்வளவு எளிதல்ல. 2-வது அலை முழுவதுமாக குறைவதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம். 

கொரோனா பாதிப்பு குறைவதாக வரைபடம் காட்டினாலும் ஒருநாள் பாதிப்பு என்பது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாகத்தான் இருக்கும். கொரோனா முதல் அலை பாதிப்பில் நிலையான சரிவு இருந்தது. அதாவது படிப்படியாக குறைந்தது. மேலும் அது 90,000-95,000 என்ற குறைவான பாதிப்பில் தொடங்கியது. ஆனால், இரண்டாம் அலையின் உச்சம் 4 லட்சம் எனத் தொடங்கியுள்ளது. எனவே, 2-வது அலை பாதிப்பு எதிர்பார்ப்பதை விட மெதுவாகவேக் குறையும்.

இந்தியாவில் உயிரிழப்பு தொடர்பான தரவுகள் தவறானது. இதற்கு ஒரு மாநிலம் அல்லது குழுவின் மீது தவறு சொல்ல முடியாது. ஆனால் இப்போது நாம் பதிவு செய்யும் உயிரிழப்புகள் தவறானது என்றே கருதுகிறேன்.

கொரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டதால் 2-வது அலையை எதிர்கொள்ள முடியும் என்ற மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு.

அதேபோல மக்கள் யாரும் கொரோனாவை பரப்ப விரும்புவதில்லை. மாறாக அவர்கள் கொரோனாவை பரப்ப வாய்ப்பளிக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது, நமக்கு எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என்று நினைத்து திருமணங்கள், விழாக்கள் நடத்தினோம். அதன் காரணமாகவே தற்போது கொரோனா மிகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களும், மத விழாக்களும் காரணம்.

அதேபோன்று கொரோனா தடுப்பூசி பெற வாய்ப்பிருந்தும் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பலரும் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளனர். இந்த இரு காரணங்களினாலே கடந்த பிப்ரவரி முதல் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. அதனால் வரும் விளைவுகள் மிகவும் அரிதானது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு.

கொரோனா தடுப்பூசிகளை நிறுவனங்கள் திட்டமிட்டபடி முறையாக வழங்குவதற்கும் வருகிற ஜூலை மாதம் ஆகலாம். எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று கூறியவர்களில் 75 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்தியாவில் கொரோனா 2-வது அலை கண்டிப்பாக குறையும். தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கொரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்