சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Update: 2021-05-13 23:22 GMT
திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் முதல் நாள் திறந்து 5 நாட்கள் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். நாளை (சனிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜை நடைபெறும். அந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பிறகு காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறாது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்