மாநிலங்களுக்கு மேலும் 11 லட்சம் தடுப்பூசி மத்திய அரசு 3 நாளில் வழங்குகிறது

மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 நாளில் 11 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளது.

Update: 2021-05-28 01:33 GMT
புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 22 கோடியே 16 லட்சத்து 11 ஆயிரத்து 940 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இந்த தடுப்பூசிகளில் பெரும்பகுதி இலவசமாகவும், ஒரு பகுதி மாநில கொள்முதல் திட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பகுதி என்பது, 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பூசி திட்டத்துக்குரியதாகும். இதுவரை வீணாக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்பட பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரத்து 768 ஆகும்.

தற்சமயம் மாநிலங்களிடம் 1.84 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

அடுத்த 3 நாளில் மேலும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 630 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்