அரியானாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

அரியானாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-05-30 09:24 GMT
சண்டிகர்,

கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரியானாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 7-ந் தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-

அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படலாம். அதேசமயம் ஒற்றைப்படை - இரட்டைப்படை வழிமுறையை கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும். அதாவது ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் இரட்டைப்படை தேதிகளிலும் திறக்கலாம். 

கல்வி நிறுவனங்கள் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை மூடியே இருக்கும். இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். மால்கள், தியேட்டர்கள், மியூசியங்கள், ஜிம்கள், லைப்ரரி, ஸ்பா, சலூன்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை வர்த்தக சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். மார்க்கெட்டிற்கு நுழையும் இடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் செய்யப்படும். அந்த குழந்தைகளின் பராமரிப்புக்காக 18 வயது வரை மாதந்தோறும் தலா 2500 ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை, அந்த குழந்தைகளை பராமரிக்கும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். 

இதுதவிர அத்தகைய குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தப்படும். ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கும் பராமரிப்பு இல்லங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்