பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலராக இருப்பவர் குமார் ஹெக்டே.

Update: 2021-05-30 18:15 GMT

இவருடைய சொந்த ஊா் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி ஆகும். இந்த நிலையில் குமார் ஹெக்டே, மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி குமார் ஹெக்டேவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் குமார் ஹெக்டே திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண், மும்பை போலீசில் குமார் ஹெக்டே மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த குமார் ஹெக்டே, தனது சொந்த ஊரான மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளிக்கு வந்து தலைமறைவாக இருந்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் மும்பை போலீசார் குமார் ஹெக்டேவை தேடி வந்தனர்.

இந்த நிலையில், குமார் ஹெக்டே சொந்த ஊரில் தலைமறைவாக இருப்பது மும்பை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன்படி, மும்பை போலீசார் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி கிராமத்துக்கு வந்து அங்கு பதுங்கி இருந்த குமார் ஹெக்டேவை கைது செய்தனர்.

 

மேலும் செய்திகள்