பஞ்சாபில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 வரை நீட்டிப்பு
பஞ்சாபில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,
கொரோனா 2-வது அலையின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் புதிதாக தொற்று பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை சரியத்தொடங்கியிருக்கிறது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருந்த மாநிலங்கள் தற்போது மெல்ல மெல்ல தளர்வுகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளன.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பல்வேறு தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகளை மாலை 6 மணி வரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் பஞ்சாப் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.